top of page

என் Order of Things

1992ல் யுஜிசி உதவித் தொகை மாதம் ரூ.1800/- முதல் மாதத் தொகை வந்ததும் ப்ரியா காம்பெளெக்ஸுக்குத் தான் போனேன். அங்கிருந்த ஹிக்கின்பாதம்ஸில் ஃபூக்கோவின் ‘The Order of Things’ வாங்குவது தான் திட்டம். என் காசில் வாங்கிய முதல் புத்தகம். பொக்கிசம் போலத் தெரிந்தது. உடனே அதற்கொரு அட்டையைப் போட்டேன். அழுக்காகிவிட்டால்?


அது மிகக் கடினமானப் புத்தகம். ஒவ்வொரு பக்கத்தையும் நான்கைந்து முறை படிக்க வேண்டியிருந்தது. உள்ளிருக்கும் அத்தியாயங்களாவது பரவாயில்லை, அதற்கு ஃபூக்கோ எழுதியிருக்கும் முன்னுரை தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.


Diego Velazquez என்றொரு ஓவியரைக் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது. அவரது Las Meninas என்ற ஓவியம் பிரபலமானது என்பதும் மசமசவென்று விளங்குகிறது. அதற்கப்புறம் எதையும் உள்வாங்க முடியவில்லை. இடையிடையே ஏதோவொரு நாடகத்தை விவரிப்பது போலவும் சில பத்திகள். ஓரிடத்தில், ஓவியத்திலிருந்து ஓவியன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எழுதுகிறார். இதை க்கவித்துவமாகப் புரிந்து கொள்வதா அல்லது உண்மையா என்று புரியவில்லை. அன்றைக்கு இணைய வசதிகள் இல்லை என்பதால், யார் இந்த Diego, Las Meninas எப்படி இருக்கும் என்றெல்லாம் பார்க்க முடியவில்லை. அந்த முன்னுரை என்ன பேசுகிறது என்பதை கடைசி வரை என்னால் உள்வாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


ஒரு கட்டத்தில் Order of Things யை கடாசிவிட்டு, வேறு புத்தகங்களுடன் சண்டையிட ஆரம்பித்து விட்டேன். ஆனாலும் ஒரு பக்கம் அந்த முன்னுரை உறுத்திக் கொண்டே தான் இருந்தது. அதனால் அது இருந்த பக்கமே நான் திரும்பவில்லை. அகஸ்மாத்தாய் ஒரு நாள், அலமாரியை ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது, மீண்டும் Order of Things கைக்கு வந்தது. சிரித்துக் கொண்டேன். எவ்வளவு தொந்தரவு செய்கிறது, ஒரு புத்தகம்! அடம் பிடித்து அழுச்சாட்டியம் செய்யும் சிறுவனைத் தூக்கி வைத்திருப்பது போல அதைப் பிடித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் போட்டிருந்த அட்டை ஓரங்களில் நைந்து போயிருந்தது. பழைய செய்தித்தாளைக் கொண்டு அட்டை போட்டிருந்தேன் என்பதால், பழுப்பேறியிருந்தது. ஒரு புன்முறுவலுடன் அந்த அட்டையைக் கழட்டினேன். புதுக்கருக்கு கழியாமல் புத்தகம் புதிதாகவே இருந்தது. அதன் அட்டையைக் கவனிக்கிறேன். ஒரு ஓவியன் என்னை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அடடா… என்று, அன்று நான் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. ஃபூக்கோ அந்த முன்னுரையில் விளக்கியிருந்த Las Meninas என்ற ஓவியம் தான் அட்டைப்படமாக இருந்தது. பரவசத்தில் அப்படியே அமர்ந்து அந்த முன்னுரையை மீண்டும் முதலிலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். ஓவியத்தை விளக்கும் ஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும், அட்டைப்படத்தை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டேன். ஃபூக்கோ அந்த முன்னுரை முழுக்க, பார்வைக் கோணங்கள் பற்றியே விலாவரியாக எழுதியிருந்தார். துணைக்கு அந்த ஓவியம். இந்த அனுபவத்திலிருந்து நான் பெற்றுக் கொண்ட நீதியை கடைசியில் சொல்கிறேன்.






Las Meninas என்ற இந்த ஓவியமே ஐரோப்பிய மரபில் மிக அதிகமாக சிலாகிக்கப்பட்ட ஓவியம். ஓவியத்தின் ஆன்மாவை விளக்கும் ஓவியம் என்றெல்லாம் கூட இதை பாராட்டியிருக்கிறார்கள். Las Meninas என்றால், தாதிகள் அல்லது பார்த்துக் கொள்கிற பெண்கள் என்று பொருள். அந்த ஓவியத்தின் பிரதானமாக இருக்கும் சிறுமியின் பெயர், இன்பண்டா மார்க்ரெட் தெரேசா. ஸ்பெயின் மன்னரான நான்காம் பிலிப்பின் ஒரே மகள். அவளது இடது, வலது புறங்களில் இருப்பவர்கள் தான் அந்தத் தாதிகள். உடல் சிறுக்கும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் அங்கே நிற்கிறார். அவரது பெயர் மேரி பர்போஸா. அவரும் கூட ஒரு தாதி தான். ஆனால், அவரது பார்வை நம்மை நோக்கி இருக்கிறது. அருகிலேயே ஒரு நாய் உட்கார்ந்திருக்கிறது. அது தரையில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறது. பின்னாலிருந்து ஒரு குழந்தை அந்த நாயை உதைத்து சீண்டுகிறது.

இடது புறம் நிற்பது தான், ஓவியர் டிகோ. இந்த ஓவியத்தை வரைந்தவர். அவர் ஓவியத்தினுள் ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கிறார். ஓவியப் பலகையின் பின்புறச் சட்டங்கள் நமக்குத் தெரிகின்றன. எதையோ பார்த்துப் பார்த்து வரைந்து கொண்டிருக்கிறார். அவர் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ, அது அந்த ஓவியத்தில் இல்லை. ஆனால், அவர் என்ன வரைந்து கொண்டிருக்கிறார் என்பதன் கலங்கிய தோற்றம், இன்பெண்டாவின் தலைக்கு மேல் தெரியும் கண்ணாடியில் தெரிகிறது பாருங்கள். அரசர் நான்காம் பிலிப்பும் அவரது மனைவியும். அவர்கள் தான் நம் அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களது ஓவியத்தையே டிகோ வரைந்து கொண்டிருக்கிறார்.


ஓவியத்தின் பின்புறத்தில் ஒரு வாசல் திறந்திருக்கிறது கவனியுங்கள். அங்கிருக்கும் படிக்கட்டில் ஒரு மனிதர் நின்ற படி எதையோ கவனிக்கிறார். அவர் போய்க் கொண்டிருக்கிறாரா, வந்து கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. பாதியில் நின்று ஒட்டுமொத்த விஷயத்தையும் கவனிக்கிறார். அறையின் வலது புற மூலையில் இன்னுமிருவர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தாலும், அதில் ஒரு பெண் பேச்சோடு பேச்சாய் அறையில் நடப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.


இந்த ஓவியம் தாதிகள் என்று ஏன் பெயரிடப்பட்டிருக்கிறது என்று விளங்குகிறதா? எல்லோரும் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டிகோ தான் வரையும் ஓவியத்தையும் அதன் அசலையும் சரிபார்த்துக் கொள்கிறார். குழந்தை இன்பண்டா ஓவியம் வரையப்படுபவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தாதிகள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாய், தன் உலகத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை ஒரு சிறுமி சீண்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரு பெண்கள் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தாலும் அறையில் நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாசலுக்கு வெளியே நிற்கும் நபர் அறையில் நிகழும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். வரையப்படும் அரசரும் அவரது மனைவியும் இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் இவ்வனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிளேட்டோவின் குகையைப் போல இந்த ஓவியமும் பார்வைகளின் பன்மைத்துவத்தையே பேசுகிறது. ஒரே ஓவியத்திற்குள் இத்தனை ஓவியங்களைக் கொண்டு வந்தது தான் டிகோவின் சாதனை என்கிறார்கள்.


கண்ணோட்டம், பார்வை, அவதானம் என்றெல்லாம் சொல்லப்படும் Gaze தான் இதன் மையம். விதவிதமானப் பார்வைகள். அப்பார்வைகளை ஒரே ஓவியத்திற்குள் சாத்தியப்படுத்தியதன் மூலம், அவ்வத்தனைப் பார்வைகளையும் ஒரு சேர பார்க்கக்கூடிய வாய்ப்பை ஓவியர் நமக்கு ஏற்படுத்தித் தருகிறார். இருப்பதை மட்டுமல்ல, இல்லாததையும் (நான்காம் பிலிப்பும் அவரது மனைவியும்), தெரியாததையும் (டிகோ வரையும் ஓவியம்), சரிவரத் தெரியாததையும் கூட (கண்ணாடியில் தெரியும் மங்கலான பிம்பம்) இந்த ஓவியத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். The Order of Things ல் ஃபூக்கோ விலாவரியாய் இதைத் தான் பேசுகிறார். இந்தக் குழப்பமான உலகில் மனிதன் எப்படி எப்படியெல்லாம் தெளிவுகளைக் கண்டுபிடித்தான் என்பது தான் ஒட்டுமொத்த பிரச்சினையும். தெரிந்தது, தெரியாதது, அரையும்குறையுமாகத் தெரிந்தது, சுத்தமாகத் தெரியாதது என்று பார்த்த அத்தனையையும் அறிவுத் தொகுதிகளாக மாற்றியமைத்ததே மானுட வளர்ச்சி. அதில் சில கண்ணோட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டன, சில புறக்கணிக்கப்பட்டன என்பது அவரது அடுத்தடுத்த புத்தகங்களின் கருப்பொருளானது. நான் Order of Things என்ற புத்தகத்தை வாசித்த அனுபவம் இப்படித் தான் இருந்தது.


கடைசியில் சொல்வதாகச் சொன்ன நீதி:


எந்தவொரு புத்தகத்தையும் (அட்டை கிட்டையெல்லாம் போட்டு) தாதியைப் போல அணுகாதீர்கள்! கூடுமானவரை அதை நிர்வாணமாய் பார்க்க முயற்சி செய்யுங்கள்.

 
 
 

Recent Posts

See All
அசைக்கும் படிமம் - இமாம் அட்னன்

காலச்சுவடில் வெளியான 'கீழ்ப்படிதலின் இசை' கட்டுரை குறித்து இமான் அடனன் எழிதியுள்ள பதிவு. அசைக்கும் படிமம் ==> அசைக்கும் குறியீட்டாக்கம்...

 
 
 

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page