அயோத்திதாசர்
அயோத்திதாசரைக் கொண்டாடுதல் என்றால் ஒடுக்கப்பட்டதைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்டவன், ‘அனாதையாக வீழ்ந்து கிடக்கும் பிணம்’ என்று கருதுகிற தேசத்தில் இந்தக் கொண்டாட்டம் அவசியம். அவனுக்குத் தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவனே இந்த தேசத்தில் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும், ஒழுக்கத்திற்காகவும் போராடியவன்.
இன்று, சூழ்ச்சிகளின் மத்தியில் குற்றுயிராய்க் கிடக்கிறான் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அநீதிகள் மலிந்த நாட்டில் நீதியைப் பேசுகிறவர்களே ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள் என்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. கல்வி செத்த நாட்டில் அறிவாளியே தீண்டத்தகாதவர். மொழி சிதைந்த ஊரில் அர்த்தம் தெரிந்தவர்களுக்கே பேச்சு வராது. ‘அயோத்திதாசர்’ என்றால் ஒடுக்கப்பட்டவனின் சுயம் என்று பொருள். ஒடுக்கப்படுதலை இவரை விடவும் வலிமையாய் கற்பனை செய்த சிந்தனையாளர் உலக வரலாற்றில் யாருமில்லை.’
தமிழ் நாட்டுப்புறவியல்
தமிழ் நாட்டுப்புறவியல் என்று ஒன்று உருவாக்கப்படுகிறது என்றால், அதன் மையமான விவாதப் பொருளாக ஒடுக்கப்பட்ட மக்களே இருக்க வேண்டும் என்பது தான் நியாயம். யார் அந்த நாட்டார் அல்லது நாட்டுப்புறத்தார் என்ற கேள்வியைத் தமிழ் சூழலில் கேட்கும் பொழுது 'ஒடுக்கப்பட்ட மக்கள் தான்' என்றே பதில் சொல்ல வேண்டும்.
சமூகத் தளத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்களோ அப்படியே நாட்டுப்புற வழக்காறுகளும் பண்பாட்டுத் தளத்தில் ஒதுக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே தங்களது பண்பாட்டு அடையாளமாக வழக்காறுகளைக் கைகாட்டுகின்றனர். தங்களது வரலாற்றை, ஞானத்தை, தத்துவத்தை, அறிவியலைப் பாதுகாத்து வைக்கும் சேமக்கலனாக வழக்காறுகளையே அவர்கள் கருதுகின்றனர். வழக்காறுகளிலிருந்து அவர்களை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை .
ஒடுக்கப்பட்ட மக்களில் மிகவும் குறிப்பான மூன்று பிரிவினரைப் பற்றியே இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன.
டி. தருமராஜின் அயோத்திதாசரியம்
அயோத்திதாசரியம் என்ற விமர்சன படைப்பாக்கம்!
அயோத்திதாசரின் ஆய்வு முறையியலில் ஒரு முக்கியமான பகுதி, ‘தன்’னை வடிவமைத்தல். விளக்கமாகச் சொன்னால், அவரிடம் எவ்வளவுக்கு எவ்வளவு விமர்சனங்கள் உண்டோ அதே அளவுக்கு படைப்பாக்கங்களும் உண்டு.
அவர், கட்டுடைக்கிற ஒவ்வொரு கணமும் கட்டமைத்துக் கொண்டும் இருக்கிறார். ‘இந்திய தேசம்’ என்பதைக் கட்டுடைக்கிற அடுத்த நொடி, ‘இந்திர தேசம்’ என்பதை அவரால் உருவாக்க முடிகிறது. ‘பறையர்’ என்ற சொல்லைக் கட்டுடைக்கிற மறுகணம் ‘பூர்வ பெளத்தர்’.
நான் ஏற்கனவே எழுதியிருப்பதைப் போல, இவற்றை ‘மாற்று விளக்கங்கள்’ என்றும் சொல்வதற்கு இல்லை; இவையே, மெய் விளக்கங்கள் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடியவர் அவர். ‘மனுதர்ம சாஸ்திரம் என்பது என்ன?’ என்ற கட்டுரையிலும் அதே விஷயத்தைத் தான் செய்கிறார்.