ஜல்லிக்கட்டு நூல் பற்றி...
- tdharmaraj67
- 2 days ago
- 1 min read
தமிழ் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு பெரிய போராட்டம்.
தமிழகமெங்கும் மக்கள் ஒரு சேர கலந்து கொண்ட ஒரு போராட்டம்.
தமிழர்களின் வீர விளையாட்டைக் காக்க, தமிழர்களின் அடையாளத்தைக் காக்க என்ற உணர்வோடு அனைவரும் கூடிவந்த ஒரு பெரும் நிகழ்வு.
இம்மாதிரியான ஒரு பெரும் நிகழ்வு ஒரு பண்பாட்டு ஆய்வாளரின் பார்வையில் எப்படி விரிகிறது என்பதை விளக்குவதே இந்த நூல்.
டி. தருமராஜ் தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர்; ஒரு பண்பாட்டு ஆய்வாளர். நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாடு சார்ந்த கோட்ப்பாடுகளின் உதவி கொண்டு ஜல்லிக்கட்டு எனும் பெரும்நிகழ்வை ஆராய்ந்து அதன் உள் இடுக்குகளை இவர் இந்த நூலில் வெளிக்கொணரும்போது மாயாஜாலக்காரன் செய்யும் வித்தையைப் பார்த்து ரசித்து வியக்கும் சிறுவன் போலவே நானும் ரசித்து வியந்தேன்.
சமூகவியல் மற்றும் மானிடவியல் சிந்தனையாளரான மார்சல் மாஸ்-உடைய பரிசம் பற்றிய கோட்பாட்டுடன் ஆரம்பித்து அதில் கிடைக்கும் தரவுகளைப் பற்றிக்கொண்டு உளப்பகுப்பாய்வியல் சிந்தனையாளர்களின் (பிராய்டு மற்றும் லக்கான்) கோட்ப்பாடுகளுக்குள் புகுந்து தொடர்ச்சியான மற்றொரு தரவைக் கண்டடைகிறார் ஆசிரியர். அந்த வியப்பு மழுங்கும் முன்பே பொருள்கோளியல் கோட்பாட்டினடிப்படையில் சங்க இலக்கியங்களையும் சங்கம் மருவிய கால இலக்கியங்களையும் மறுவாசிப்பு செய்து மற்றுமொரு புதிய தொடர்ச்சியைக் கண்டுபிடித்துத் தருகிறார். இந்த தொடர்ச்சியைக்கொண்டு குறியியல் சிந்தனையாளர்களின் (குறிப்பாக லாக்லவ்) கோட்பாடுகளை கையிலெடுத்துக்கொண்டு இன்னுமொரு மாயச்சுழற்சிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். இறுதியாக வெகுஜனவியக் கோட்பாட்டோடு இணைத்து அனைத்து தரவுகளையும் அடுக்கிவைத்து பேசும்போது முற்றிலும் புதியதொரு புரிதலுக்கு வாசகரை இட்டுச்செல்கிறது. இடைஇடையே துணை ஆதாரங்களாக கள ஆய்வுத் தகவல்களைத் தரும்போது "அடடே!" என்று சொல்ல வைக்கிறது.
மொத்தத்தில், இந்த நூலை வாசித்தபோது சாகச அறிவுப் பயணம் செய்தது போல இருந்தது.
மரிய தனராஜ்.

Comments