ஜல்லிக்கட்டு - சக்தி நூலக வாசகர் சந்திப்பு
- Apr 8
- 1 min read
பாலா கருப்பசாமியின் சக்தி நூலகத்தில் நடந்த வாசகர் சந்திப்பு மனதுக்கு நிறைவாக இருந்தது.
‘ஒரு புத்தகத்தை எழுதி முடித்து, அதன் அச்சு வடிவத்தைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பரவசத்தை நீங்கள் முழுமையாக வெளிப்படுத்துகிறீர்கள். அது என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்ற பாலா கருப்பசாமியின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
எழுத்தாளன் தன் புத்தகங்கள் மீது பற்றற்றவனாக இருக்க வேண்டும் என்று யார் எந்த காலத்தில் சொல்லி வைத்தார்கள் என்று தெரியவில்லை; இதுவொரு சாபம் போல தமிழில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ‘என் எழுத்தைப் பற்றி மற்றவர்கள் தான் பேச வேண்டும்; நானே எப்படி பேசிக் கொள்வது?’ என்பது தான் இங்கே பலரின் யோசனையும்.
நானும் இந்த மயக்கத்தில் தான் ரொம்ப காலம் இருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில், ‘என் எழுத்தை நானே பேசவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி பேசுவார்கள்’ என்று தோன்றியதும், நான் உடனடியாக என் கூச்சத்தை உடைத்து எறிந்தேன். பாலா இதைத் தான் தனது ஆச்சரியமாக வெளிப்படுத்தினார்.

நேற்றைய ‘ஜல்லிக்கட்டு’ நூல் அறிமுகக் கூட்டத்தில், ஒரு வாசகர் இப்படிக் கேட்டார்.
‘ஜல்லிக்கட்டின் பழைய வடிவம் தானே ஏறுகோள்?’
‘இல்லை’ என்று சொன்னேன். ‘ஜல்லிக்கட்டு, 17ம் நூற்றாண்டு வாக்கில் திருமலை நாயக்கர் கண்டுபிடித்த ஒரு வகை வீர விளையாட்டு. அதில் வெற்றி பெற்றவருக்கு காசு (ஜல்லி) பரிசாக வழங்கப்பட்டது.’
‘அப்படியானால், ஏறுகோள்?’
‘ஏறுகோள், தமிழ்ப் பண்பாடு கண்டுபிடித்த ஆணவக்கொலை. அதில் காதலர்களுக்கு மரணம் பரிசாக தரப்பட்டது’’ என்றேன்.




Comments