மாறும் வழக்காறுகள்
- tdharmaraj67
- Apr 15
- 7 min read
ஏப்பிரல் 16, 17 தேதிகளில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

1
வழக்காறுகளில் ‘மாற்றம்’ என்பது பல நிலைகளில் உள்ளது - நிகழ்த்துதலில் மாற்றம், கலைஞர்கள் உணரும் மாற்றம், நாட்டுப்புறவியலாளர்கள் கண்டுபிடிக்கும் மாற்றம், தொழில்நுட்பங்களால் ஏற்படும் மாற்றங்கள், சித்தாந்தங்களால் ஏற்படும் மாற்றங்கள், கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மாற்றங்கள், வணிகத்தால் உருவாக்கப்பட்ட மாற்றங்கள், கவர்ச்சிக்காக ஏற்பட்ட மாற்றங்கள், அசுரத்தனமான மாற்றங்கள், இருப்பை அச்சுறுத்தும் மாற்றங்கள், புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் மாற்றங்கள், வழக்காறுகளை அழித்து விடும் மாற்றம், அவற்றை மேம்படுத்தும் மாற்றம், மொழியில் ஏற்படும் மாற்றங்கள், வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள், பரவல் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், மக்களால் வரவேற்கப்படும் மாற்றங்கள் - பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்! - சாதனா நைதானி, Value of Changing Forms என்ற கட்டுரையில்.
2.
வழக்காறுகளில் உருமாற்றம்!
நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சமயப் புத்தகங்களில், விலங்குகளும் தாவரங்களும் உருமாற்றம் அடைந்த செய்திகள் உள்ளன - உதாரணத்திற்கு, Beauty and the Beast போன்ற கதைகளைச் சொல்லலாம். கி.பி 2 ஆம் நூற்றாண்டு ரோமானிய எழுத்தாளரான லூசியஸ் அபுலியஸின் Metamaphorsesல் ஒரு மனிதன் கழுதையாக மாறிவிடுகிறான்; தவளை ராசா கதை அல்லது அன்னப்பறவை தேவதைக் கதை இது போன்றது; இத்துடன் ஓநாய் மனிதன், காட்டேரி அல்லது சிறுத்தை மனிதன் போன்ற பிரபலமான கதைகளும் உள்ளன - இவையெல்லாம் உருமாற்றம் என்ற கருப்பொருளுக்கு சாட்சியங்கள்.
எதுவும் எதுவாகவும் மாற முடியும் என்பதே உண்மை. மனிதன் பாலூட்டியாக, பறவையாக, மீனாக, பூச்சியாக, ஊர்வனவாக, நீரிலும் நிலத்திலும் வாழ்வனவாக அல்லது தாவரமாக மாற முடியும்; விலங்கு மனிதனாக அல்லது தாவரமாக மாறலாம்; ஒரு விலங்கு இன்னொரு வகை விலங்காகக் கூட மாற முடியும்; அல்லது தாவரம் விலங்காக மாறும் கதைகளும் உண்டு.
இவ்வகை மாற்றங்கள், ஒரு உயிரை சில நேரங்களில் மதிப்பு கூட்டப்பட்ட உயிராக மாற்றி விடுகின்றன. இவற்றுள் சில மாற்றங்கள் நிரந்தரமானவை; சில, தற்காலிகமானவை. பகலில் விலஙகாக, மனிதனாக அல்லது மரமாகவும், இரவில் தலைகீழாகவும் இருக்கும் கதைகள் உண்டு. மற்றொரு நிரந்தரமான மாற்றம், இறந்தவர்கள் அடையும் மாற்றம். அவர்கள் இறந்த பின், விலங்கு அல்லது தாவரங்களில் அல்லது ஏதாவதொரு பொருளில் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள்.
நாட்டுப்புற வழக்காறுகளில் மாற்றம் என்பது ஒரு அடிப்படை கருத்தாக்கம்; வழக்காறுகள் சமகாலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகின்றன. அதே நேரம், பாரம்பரியத்தை தக்கவைப்பதற்காக அது மிக மெதுவாகவே மாறுகிறது என்பதும் உண்மை. வழக்காறுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்த அளவில் வகைமைகளுக்கு இடையே வேறுபாடுகள் இல்லை; இந்த வகையில், அனைத்து நாட்டுப்புற வழக்காறுளும் சமமானவை. உயர்ந்த அல்லது தாழ்ந்த வகைமை என்று எதுவும் இல்லை. ஏனெனில், எல்லா வழக்காறுகளும் மாறுகின்றன. ஆரம்பகால, பிரபலமான கோட்பாட்டு அணுகுமுறையான - வரலாற்று - நிலவியல் கோட்பாடு - மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும்.
‘நாட்டுப்புற வழக்காறுகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னம் அல்ல, மாறாக நவீன தொழில்நுட்ப உலகம் மற்றும் சமகாலப் பிரச்சினைகளின் ஒரு அங்கம். நாட்டுப்புற வழக்காறுகளை தூசி படிந்த கலைப்பொருளாகப் பார்க்காமல் ஒரு கலை செயல்முறையாகப் பார்க்கும் நவீனப் பார்வையை நாம் அடைய வேண்டும், ஏனெனில் அது இறந்ததோ நிலையானதோ இல்லை. உயிருடனும் இயக்கத்துடனும் காணப்படுவது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவை ஆதி காலத்து கலைப்படைப்புகள் அல்ல. வரலாற்று ரீதியாக அல்லது சமூக ரீதியாக தொடர்ந்து மாறி வந்திருக்கும் மானுட நடத்தை முறை’. - ஆலன் டண்டிஸ், The Study of Folklore.
நாட்டுப்புறவியல் என்பது பழமைக்கும் புதுமைக்கும் (அதாவது, மாற்றத்திற்கும்) இடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை. இது, கடந்த காலத் தொடர்புக்கும் நிகழ்கால நெருக்கடிக்கும் இடையில் நடக்கும் இழுபறி என்றாலும் தவறு இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை நிகழ்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தலே நாட்டுப்புற வழக்காறுகள். நகர்ப்புற புராணக்கதைகள், சுயமரியாதைத் திருமண முறைகள், ரசிகர் மன்ற செயல்பாடுகள் என்று நம் சமூகத்தில் காணப்படும் பல விஷயங்களுக்கு நாட்டுப்புறவியலின் இக்குணமே காரணம். கடந்த காலத்தின் இழைகளைச் சேகரித்து, நாம் இப்போது வாழும் உலகத்திற்கு ஏற்ற ஆடையை நெசவு செய்து அணிந்து கொள்கிறோம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
நாட்டார் இசைப் பரவலைப் பற்றி பேசுகிறவர்கள் அவ்விசையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள். ஒரு நாட்டுப்புறக் கலைஞன், எவ்வாறு ஒரு இசை வடிவத்தைக் கற்றுக் கொண்டானோ அதை கொஞ்சமும் பிசகாது அப்படியே இசைக்க வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு இசை வடிவம் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமேயொழிய, ஒரு கலைஞன் முந்திக் கொண்டு அவ்விசையைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் உருவாகக்கூடாது; எனவே, ஒரு நாட்டார் இசைக் கலைஞனின் பணி, அவ்விசையைத் திரும்பச் செய்வது மட்டும் தான் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது (ரோஜர் ஆப்ரஹாம்ஸ், ஜார்ஜ் ஃபாஸ், 1968, Anglo American Folk song style, Lisbe, PP. 201).
‘மாற்றம்’, நாட்டுப்புறவியலில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வரும் கருத்தாக்கம். சில நேரங்களில், கோட்பாடுகளாக; வேறு சில நேரங்களில் முறையியல்களாக. பரிணாமக் கோட்பாடு, மாற்றத்தை வளர்ச்சியாகவும் தகவமைப்பாகவும் விளக்கியது. இதற்கு நேர் எதிராக, மாற்றத்தை பெருங்கேடாக விளக்கியவர்களும் உண்டு. அவர்களுக்கு சீரழிவுக் கோட்பாட்டினர் என்று பெயர்.
தேசியவாதம் பேசப்பட்ட காலத்தில் வழக்காறு மாறுகிறதே என்று பதட்டப்பட்ட நாடுகள் ஏராளம். ஏனெனில், பண்பாட்டு தேசியவாதிகளுக்கு ஒரு தெளிவான பழமைவாதி தேவைப்படுகிறார். அப்பொழுது தான் அவர்களால் அடையாளங்களை உற்பத்தி செய்ய முடிகிறது. அந்த அடையாளங்களால் எல்லா மக்களையும் ஒரே சங்கிலியில் பிணைப்பதே அவர்கள் நோக்கம். இன்றைக்கு இந்துத்துவர்கள் சாத்தியமான அத்தனை வழிகளிலும் மாறாத பழமையொன்றை நிர்மாணிக்க விரும்புவதற்கும் இதுவே காரணம். இந்தி, அகத்தியர் என்ற எல்லா அக்கப்போர்களுக்கும் மாறா பழமையொன்றை நிர்மாணிப்பது தான் நோக்கம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு, அன்றாட வாழ்வில் நிகழும் அதிரடியான மாற்றங்களைப் பற்றி சிந்திக்க ஒரு புத்திசாலித்தனமான சொல்லைக் கண்டுபிடித்தது: நாட்டுப்புறவியல். இந்தப் புதுமையான சொல், மாற்றங்களை கண்டுணர்வதற்கான முறைகளைச் சொல்லித்தருவதன் மூலம், மக்கள் மனதளவில் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும் பெரிதும் உதவியது. பின்னர் நாட்டுப்புறவியல் என்ற சொற்றொடரை பிற தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டாலும், தொடக்கத்தில் நாட்டுப்புறவியல் என்றால் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், நவீனத்துவம் என விவரிக்கப்படும் சமூக, பொருளாதார, சூழலியல் மாற்றங்களை ஆவணப்படுத்துவதும் ஆய்வு செய்வதும் ஆகும். - Valdimar Tr. Hafstein, in an article titled ‘Folklore and Cultural Heritage - Reflecting on Change’, Journal of American Folklore, Vol. 137, No. 543, 2024.
அமெண்டா வீட்மென் என்றொரு மானிடவியலாளர் இன்று என்னைப் பார்க்க வந்திருந்தார். அமெரிக்காவிலுள்ள ப்ரையன் மேவர் கல்லூரியில் மானிடவியல் பேராசிரியர். இன்னும் ஒரு வருட காலத்திற்கு எங்கள் துறையில் ஆய்வாளராக இருப்பார். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருள் - அம்மன் பாடல்கள். அதிலும் குறிப்பாக, இன்றைய ஊடகப் பெருக்கத்தில் அம்மன் பாடல்கள் எவ்வாறு விதவிதமான வடிவங்களை எடுக்கின்றன என்று ஆய்வு செய்கிறார். தொடக்கத்தில், முளைப்பாரி எடுத்து வரும் போது பாடப்படும் பாடல்களாக விளங்கிய அம்மன் பாடல்கள், திரைப்படங்களிலும், ஒலிநாடா வடிவிலும், யூ ட்யூப் சானல்களிலும் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை தேடித் தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறார். புதிய ஊடகங்களுக்கு மாறும் போது, அம்மன் பாடல்கள் அடையும் வேறுபாடுகள் சமூகத்தின் அடியாழத்தில் நிகழும் வெளித்தெரியா மாற்றங்களை சுட்டிக் காட்டக்கூடியவை என்பது அவரது கருதுகோள். மாறும் வழக்காறுகளுக்கு இதுவொரு சிறந்த தலைப்பு.
என்ன எழுதலாம்?
‘மாறும் வழக்காறுகள்’ என்ற தலைப்பு விளங்கியது போலவும் இருக்கிறது, ஆனால் குழப்பமாகவும் இருக்கிறது. வழக்காறுகள் முன்பு போல் இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். அது உண்மை தான். வழக்காறுகள் மாறியிருக்கின்றன என்பது விளங்குகிறது. ஆனால், அந்த மாற்றத்தை எப்படி கண்டுபிடிப்பது? எதை மாற்றம் என்று சொல்வது? அதற்கு ஏதும் அளவுகோல் உண்டா? ஆய்வாளர்களுக்கு இப்படி பல கேள்விகள்.
நாட்டுப்புறவியலில், கள ஆய்வைத் தவிர்த்து பெரிய ஆசான் யாரும் இல்லை. நீங்கள் எதை ஆய்வு செய்ய விரும்புகிறீர்களோ, அதை நேரடியாகக் களத்தில் போய் பாருங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் நாட்டுப்புறக் கலைஞர்களைப் பற்றி கட்டுரை எழுத விரும்பினால், நேரடியாக அவர்கள் இருப்பிடத்திற்கே போய் விடுங்கள். அவர்கள் வாழும் சூழலைக் கவனியுங்கள். அவர்களது வாழ்க்கை முறையை கவனித்துப் பாருங்கள். அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருங்கள். அவர்களின் குடும்பத்தை விசாரியுங்கள். அவர்கள் நிகழ்ச்சி நடத்துவது பற்றி கேளுங்கள். அடுத்த நிகழ்ச்சி எந்த ஊரில், எப்போது என்று விசாரியுங்கள். அவர்களது சன்மானம் பற்றி கேளுங்கள். அவர்களது குழந்தைகள், அவர்களின் படிப்பு பற்றி விசாரியுங்கள். இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லச் சொல்ல, நாட்டுப்புறக் கலையும் கலைஞர்களும் எப்படி மாறிப் போயிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியவரும்.
இதே வழிமுறையை எல்லா வழக்காறுகளுக்கும் பயன்படுத்துங்கள். நேரடியாக அது நிகழும் இடத்திற்கே சென்று விடுங்கள். அதைக் கண்கொண்டு பாருங்கள். அவ்வழக்கங்கள் குறித்து அந்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள். நீங்கள் கேட்க கேட்க, அந்த மக்களே உங்களுக்குச் சொல்வார்கள் - ‘அந்தக் காலம் மாதிரி இல்லை. எல்லாம் மாறி விட்டது!’.
ஏதாவதொரு தெய்வம், சடங்கு, நம்பிக்கை, வழிபாடு, கோவில், உணவு, கூத்து, ஆட்டம், இசைக்கருவி, பாடல், ஆடை, அணிகலன், ஒப்பனை, படையல், காப்பு, விரதம், நேர்த்திக்கடன், திருவிழா, பலி, தீட்டுகழித்தல், கை மருத்துவம், சமைக்கும் முறை, பண்டபாத்திரங்கள், விளக்கு வகைகள், அலங்காரங்கள், ஊர்க்கட்டுப்பாடுகள், பஞ்சாயத்து, உறவுமுறைப்பெயர்கள், திருமணம், இறப்புச்சடங்கு, ஊர்ப்பெயர்கள், விளையாட்டு, பட்டப்பெயர்கள், சுவர் விளம்பரங்கள், மொய்பணம், தெய்வச் சிலைவடிவங்கள், வேடிக்கைக் கதைகள், ஊர்சாட்டுதல், கண்மாய் பராமரிப்பு, மழைச் சடங்கு, அம்மை நோய், வீட்டுப்பிராணிகள், சாமித்தோப்பு, புனித மரங்கள், நாடோடிகள், விவசாய முறைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என்று வானத்தின் கீழிருக்கும் அத்தனையைப் பற்றியும் (வானமும் இதில் அடங்கும்) நீங்கள் எழுத முடியும்.
செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அந்தக் களத்திற்கே சென்று விடுவது. கள ஆய்வு தான் ஆதாரம். மாற்றம் அங்கே தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை நேரடியாகப் போய் பார்த்து விடுங்கள். அதன் பின் அதை கட்டுரையாக எழுதுங்கள்.
மாற்றத்தை எழுதலாம், வாருங்கள்!
நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் ஊடகங்களை மாற்றிக் கொள்ளலாம், வேற்று மொழியில் பயணம் செய்யலாம், ஒரு பண்பாட்டிலிருந்து இன்னொரு பண்பாட்டிற்குக் கூட செல்லலாம்; ஆனால், எல்லா தருணத்திலும், எல்லா அவதாரத்திலும் தத்தம் தனித்துவத்தை மட்டும் விட்டுத்தருவதில்லை. நாட்டுப்புறக் கலைப் பொருட்கள் நாட்டுப்புற மக்களை விட நீண்ட காலம் வாழக் கூடியவை. பண்பாடு முழுவதுமாக அழிந்துவிட்டாலும் கூட அவை இருக்கும், இதனால் அவை பண்டைய காலத்தின் உயிரிகள் என்றும் சொல்லப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞர் ஒரு தொலைக்காட்சி நெட்வொர்க்கில் மில்லியன் கணக்கான மக்களுக்கு, தனது சொந்த கிராமத்தில் பாடுவது போலவே கூட நிகழ்ச்சி நடத்த முடியும், இதனால் அவரது கலையை அவரது சமூக வட்டத்திற்கு அப்பால் விரிவுபடுத்த முடியும். சுருக்கமாகச் சொன்னால், நாட்டுப்புற வழக்காறுகள் நாடோடித்தன்மை கொண்டவை, எல்லோருக்கும் வசப்படுபவை, ஒற்றை கலாச்சாரத்திற்கு எதிரானவை. - டான் பென் அமாஸ், Folklore Concepts - Histories and Critiques, pp. 24
நாட்டுப்புறக் கதைசொல்லியின் திறமை அவரது வாழ்க்கை அனுபவத்திலிருந்து உருவானது. அதே கதைசொல்லிக்கு புதிய சூழல்களில் கதைகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தனது திறமையை விரிவுபடுத்துவதற்கும் சரிசெய்வதற்கும் அடிப்படையாக அதே கதைத் திறன்களையும் பார்வையாளர்களைப் பற்றிய விழிப்புணர்வையும் அவர் பயன்படுத்த முடிந்தது. பெரிய, அறியப்படாத பார்வையாளர்களுடன் தொடர்புடைய ஒரு கலைஞராக அவர் ஏற்கனவே ஒரு கருத்தைக் கொண்டிருந்தார், அதை அவர் பயன்படுத்த முடிந்தது. அவரது புலனுணர்வு இந்த புதிய கேட்போரின் கோரிக்கைகளுக்கு விரைவாக சரிசெய்ய அவரை அனுமதித்தது. அவர் இன்னும் ஒரு பாரம்பரிய கலைஞராகவே இருக்கிறார், ஆனால் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயமாக அவரது நடிப்பை மாற்றியமைத்துள்ளன. மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; இதை எழுதும் வரை எட் கதைகளைச் சொல்லும் வீடியோடேப் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக இந்தப் புதிய சூழல் அவரது கதைகளைச் சொல்வதில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தும்; ஆனால் அடிப்படையில் எட் பெல் தனது பாரம்பரியத்திற்கு உண்மையாகவே இருக்கிறார்.
வழக்காறுகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று கண்டு பிடிப்பது எப்படி?
வழக்காறுகளின் அடிப்படைக் காரணிகள் என்று கீழ்க்கண்டவற்றையே நாம் குறிப்பிடுகிறோம்.
வாய்மொழித்தன்மை
மரபுக்கு தரப்படும் முக்கியத்துவம்
3 சூழலோடு இணைந்த போக்கு
4 விரிக்கவும் சுருக்கவும் அனுமதிக்கிற பனுவல்
5 நிகழ்த்தப்படுவது
6 பார்வையாளர் ஊடாடுவதற்கான அனுமதி
7 குழுச் செயல்பாடு
8 வேகமாகப் பரவும் ஆற்றல்
9 பழக்கமே சிறந்த ஆசான்
10 உருவாக்கியவனைத் தெரியாது - அனாமதேயம்
இந்தப் பத்தில் ஏதாவதொன்று காணாமல் போயிருந்தாலும் அந்த வழக்காறு மாறியிருக்கிறது என்ற முடிவிற்கு வர முடியும். எத்தனைக் காரணிகளை வழக்காறு கொண்டிருக்கிறது என்று கவனியுங்கள். இல்லாத காரணிகளை வரிசைப்படுத்துங்கள். அவை இடம் பெறாததற்கானக் காரணங்களை நாட்டுப்புறத்தவரிடமே கேளுங்கள். அதன் பின் நீங்கள் உங்களது அபிப்பிராயங்களை எழுத ஆரம்பியுங்கள். இப்பொழுது நீங்கள் வழக்காறுகளின் மாற்றத்தை எழுதிக் கொண்டிருப்பது உங்களுக்கே விளங்கும்.
ஒரு நாட்டார் குழுவின் பொதுத்தன்மை நலிவடைகிறது என்றால், அதன் வழக்காறுகளுக்கு என்ன நடக்கிறது என்று கவனிப்பது அவசியம். உதாரணத்திற்கு ஒரு கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ப்புற குணத்தைப் பெறுகிறது என்றால், அதன் பொதுத்தன்மை சிதைகிறது என்று அர்த்தம். இவ்வாறு பொதுத்தன்மை சிதையும் போது அதன் ஏராளமான நம்பிக்கைகளும் சடங்குகளும் மறையத் தொடங்குகின்றன.
ஒரு வழக்காறு சமூகப் பயன்பாட்டை இழக்கும் போது அதில் மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. அப்படி பயன்பாட்டை இழந்த பின்னும் அது அச்சமூகத்தில் உயிர் வாழ்கிறது என்றால், வேறொரு புதிய பயன்பாட்டை பூர்த்தி செய்கிறது என்று முடிவு செய்யலாம். ஒரு புராணக்கதை, பொழுது போக்குக் கதையாக மாறியிருக்கலாம். அடக்குமுறையை எதிர்த்துக் கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறப் பாடல் சினிமாவில் குத்துப்பாட்டாக மாறியிருக்கலாம். இவையெல்லாம், ஒரு வழக்காறின் பழைய பயன்பாடு மறைந்து உருவான புதிய பயன்பாடுகள். மூடநம்பிக்கைகளைப் பொறுத்தவரை, அதைத் தெரிந்திருப்பதற்கும் நம்புவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சில நாட்டுப்புறத்தவர் மூடநம்பிக்கையை நிஜம் என்று நம்பலாம், ஆனால் கடைபிடிப்பதற்கு கூச்சப்படலாம். வேறு சிலர், நம்பாமலிருந்து கட்டாயத்தின் பேரில் கடைபிடிக்கலாம். எனவே, மூடநம்பிக்கைகள் பற்றிய கள ஆய்வின் போது, நாட்டுப்புற மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது மிக முக்கியம். அதுவே, வழக்காறுகளில் உருவாகும் மாற்றங்களை நமக்குச் சுட்டிக்காட்டும்.
ஆப்பிரிக்க வழக்காறுகள் குறித்து பேசும் போது டான் பென் அமாஸ் இப்படி எழுதுகிறார்:
‘ஆப்பிரிக்காவின் பாரம்பரிய கதைசொல்லும் முறை அழிந்து கொண்டிருப்பதாக யாரும் அவசரப்பட்டு ஒப்பாரி வைக்க வேண்டாம். நகரமயமாதல், கிறிஸ்தவ இஸ்லாமிய சமயங்களின் பெருக்கம், வெகுஜன ஊடகங்களின் அசுர வளர்ச்சி போன்றவை வாய்மொழி வழக்காறுகளை பாதிக்கின்றன என்பது உண்மை தான்; ஆனால், இதனாலெல்லாம் அவை அழிந்து விடவில்லை. பலரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, கிராமப்புற நகர்ப்புற ஆப்பிரிக்காவில் வழக்காறுகள் இன்றும் உயிர்ப்புடன் காணப்படுகின்றன. மிகப்பெரும் பண்பாட்டு மாற்றங்களுக்குப் பின்பும் வழக்காறுகள் அழியாமல் நிற்கின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம் நாட்டுப்புறக் கலைஞர்களின் பாரம்பரியம் மீதான பிடிமானம் மட்டுமல்ல; அவர்கள் புதிய சூழலுக்கு தங்களையும் தங்கள் கலைகளையும் சீக்கிரமே தகவமைத்துக் கொண்டார்கள் என்பது முக்கியம். அவர்கள் கதைசொல்லும் நிகழ்வின் அடிப்படைகளை மாற்றத் தயங்கவில்லை, வழக்காறுகளை மாற்றியமைக்கவோ, புதிய வடிவங்களை பரிட்சித்துப் பார்க்கவோ அவர்கள் என்றைக்குமே மறுத்ததில்லை.
இது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை. அதை விளங்கிக் கொள்வதற்கு பாரம்பரிய வழக்காறுகளையும் புதிய வழக்காறுகளையும் ஒப்பிட்டால் மட்டும் போதாது. அப்படிச் செய்தால் அது தரவுகளின் தொகுப்பாக மட்டுமே இருக்கும். மாறாக நாம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். புதிய ஆப்பிரிக்க பண்பாட்டில் மரபானக் கூறுகள் என்று நாம் எவற்றை அடையாளம் காட்ட முடியும் என்று முதலில் யோசிக்க வேண்டும். நாட்டுப்புற நிகழ்வுகளில் நடைபெற்ற மாற்றங்களின் இயல்பு என்னவாக இருந்தது என்பதற்கு நாம் பதில் சொல்ல முயற்சி செய்ய வேண்டும்.’
நாட்டுப்புறவியலில் ‘நாட்டார்’ (Folk) என்ற கருத்தாக்கம் என்றைக்குமே விவாதிக்கப்பட்டதில்லை. ‘யார் நாட்டார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதுவும் கூட அடையாளப் பிரச்சினை தானேயொழிய, கருத்தாக்க விவாதம் இல்லை. ‘நாட்டார் என்பவர் குறைந்தபட்சம் ஏதாவதொரு பொதுப்பண்பைக் கொண்ட குழு’ என்பதில் நமக்கு சந்தேகமோ குழப்பமோ வந்தது இல்லை. நாட்டுப்புறவியலின் ஆகப்பெரிய பிரச்சினை வழக்காறுகளின் குணங்கள், இயல்புகள், அழகியல், அரசியல் பற்றியது மட்டுமே.
வழக்காறுகள் மாறுகின்றன என்று யோசிக்கும் பொழுது முதன் முதலாக நாம் நாட்டுப்புறத்தவரின் பொதுப்பண்பு பற்றியும் யோசிக்க ஆரம்பிக்கிறோம். எங்கே பொதுப்பண்பு அழிய ஆரம்பிக்கிறதோ அங்கே வழக்காறுகள் மறையத் தொடங்குகின்றன. எங்கே வழக்காறுகளில் மாற்றங்கள் நடக்கின்றனவோ அங்கே நாட்டார் என்ற யோசனையிலும் மாற்றங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன என்று அர்த்தம்.
எப்படி பொதுப்பண்பைக் கொண்ட குழுவால் வழக்காறுகள் உருவாக்கப்படுகின்றனவோ அதே போல், வழக்காறுகளால் அக்குழுவின் பொதுப்பண்புகளும் மீட்டுருவாக்கப்படுகின்றன. நாட்டுப்புறத்தவர் தன்னை நாட்டார் என்று உணருவது வழக்காறுகளை நிகழ்த்துவதன் மூலம் மட்டுமே. ஒரு சமூகத்தில் தாலாட்டு வழக்கொழிகிறது என்றால், நாட்டார் என்பதிலுள்ள பொதுப்பண்பு ஆட்டம் காண்கிறது என்று பொருள். பாவைக்கூத்தைப் பார்க்க கிராமத்தில் ஆட்கள் இல்லை என்று சொல்லும் போது, நாட்டுப்புறத்தவர் என்ற நினைப்பில் ஏதோ தகராறு என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.
நாட்டார் என்பது ஒரு கூடல். வழக்காறுகளால் நிகழும் கூடல். அவ்வழக்காறுகளில் மாற்றங்கள் நிகழும் போது அக்கூடலும் மாறுகிறது. ‘கூடல்’ என்பதை நான் இங்கு assemble / assemblage என்ற ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக பயன்படுத்திக் கொள்கிறேன். அந்த வகையில் ‘மாறும் வழக்காறு’களை விவாதிப்பது என்றால் நாட்டுப்புறத்தவர் என்ற கூட்டுணர்வில் ஏற்படும் மாற்றங்களை விவாதிப்பது என்று அர்த்தம்.
16
யாரெல்லாம் நாட்டார் என்ற கேள்வியைக் கேட்கிறவர்கள் இன்றைக்கும் உண்டு. இந்தக் கேள்விக்கு நீண்ட வரலாறு உண்டு. விவசாயிகளே நாட்டார் என்று தான் ஆரம்பத்தில் பலரும் பிடிவாதம் பிடித்தனர். பழங்குடிகளைச் சேர்த்துக் கொள்ளலாமா, கால்நடை சமூகங்களை சேர்த்துக் கொள்ளலாமா என்றெல்லாம் கூட விவாதங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு மத்தியில், விவசாயிகளோடு, பாட்டாளி வர்க்கத்தையும் நாட்டாராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை ரஷ்யாவிலிருந்து வெளிப்பட்டது.
இந்த விவாதத்தை முதன் முறையாக அசைத்துப் பார்த்தது ஆலன் டண்டிஸின் ‘Who are Folk?’ என்ற கட்டுரை. அதில் அவர் நகரங்களிலும் வழக்காறுகள் இருக்க முடியும் என்று வாதிட ஆரம்பித்தார் (இதுவொரு அமெரிக்க சிக்கல் என்றாலும் கூட). அதற்காக அவர் எடுத்துக் கொண்ட உதாரணம், ஜோக்குகள்.
டாக்டர்கள், போலிஸ்காரர்கள், ராணுவத்தினர் என்று தனித்தனி தொழில் செய்பவர்கள் மத்தியில் புழங்கும் ஜோக்குகளுக்கு வழக்காற்றின் தன்மை இருப்பதாக சொல்லும் டண்டிஸ், இந்த ஜோக்குகளை சொல்லிக் கொள்ளும் போது, இவர்களும் கூட நாட்டார் போலவே காணப்படுகிறார்கள் என்றார். ஆனால், அந்த நேரத்திற்கு மட்டும் தான். மற்ற நேரங்களில் அவர்களிடம் நாட்டுப்புறத்தன்மை வெளிப்படுவதில்லை என்பதைக் கண்ட டண்டிஸ், இவர்களைப் ‘பகுதி நேர நாட்டார்’ (part-time folk) என்றழைக்கலாம் என்று கூட பரிந்துரைக்கிறார். இதையெல்லாம் விட, அவர் எழுதும் ஒரு வரி முக்கியம். ‘…யார் நாட்டார் என்பதை வழக்காறுகளே தீர்மானிக்கின்றன’.
‘நாட்டுப்புறத்தவரின் வெளிப்பாடுகளே வழக்காறுகள்’ என்ற கோணத்திலிருந்து விலகி, ‘வழக்காறுகளே நாட்டுப்புறத்தவர் என்ற அடையாளத்தை உருவாக்குகின்றன’ என்று யோசனை மிகச் சரியான ஆரம்பம். ஆனால், டண்டிஸ் அதன் பின், அக்கட்டுரையிலும் சரி, பிற கட்டுரைகளிலும் சரி இந்தக் கருதுகோளை வளர்த்தெடுக்கவில்லை. வழக்காறுகள், நாட்டார் என்ற அடையாளத்தை உருவாக்குகின்றன என்றால், அது எப்படி நிகழ்கிறது? ஒரு வழக்காற்றால் இதைச் செய்ய முடியுமா அல்லது பல வழக்காறுகள் இணைந்து இப்படி செய்கின்றனவா? வழக்காறுகள் தங்களுக்குள் கொண்டிருக்கும் பிணைப்பு எத்தகையது? ஒரு பழமொழி, பிற பழமொழிகளோடு மட்டுமல்லாது கதைகளோடு, பாடல்களோடு, நம்பிக்கைகளோடு, சடங்குகளோடு, இன்னும் பல்வேறு வழக்காறுகளோடு இணைகிறது என்றால் என்ன அர்த்தம்? இந்த இணைப்பு எவ்வாறு சாத்தியமாகிறது என்பது போன்ற கேள்விகளை டண்டிஸ் எழுப்பியிருந்தால் அவருக்கு ஆச்சரியமான பதில்கள் கிடைத்திருக்கக்கூடும். நாட்டுப்புறவியலை அவரால் வேறு மாதிரியாக விளக்கியிருக்க முடியும்.
ஆனால், அவர் யார் நாட்டார் என்ற கேள்விக்கு மிக எளிய பதிலைச் சொல்வதோடு சமாதானமடைந்து விடுகிறார். அந்தப் பதில், ‘மற்ற எல்லாரையும் போல் நாமும் தான் நாட்டார்’ என்று அமைந்திருந்தது. அதாவது, இந்த உலகத்தில் எல்லோருமே நாட்டார். சிலர், முழு நேர நாட்டார், சிலர் பகுதி நேர நாட்டார்.
‘வழக்காறுகள் நாட்டாரைத் தீர்மானிக்கின்றன’ என்ற வரியிலிருந்தே மாறும் வழக்காறுகளை யோசிக்க வேண்டும்.
17
இவ்வுலகில் தற்செயலாய் (contingency) உருவான விஷயங்கள் தான் அதிகம். ஆனால், அவை, பார்வைக்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை போலவே தோன்றும். மிக நல்ல உதாரணம், மொழி. அது தற்செயலாய் உருவானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதிலொரு திட்டம் ஒளிந்திருப்பதாகவே நமக்கு சந்தேகம் வருகிறது. இங்கே திட்டம் என்பதை அரசியல், கருத்தியல், நோக்கம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள முடியும்.
பண்பாடும் இந்த வகையைச் சார்ந்தது தான். திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகவே தோன்றும்; ஆனால், தற்செயலானது. ஆசீவகர்கள் திரும்பத் திரும்ப சொல்லிப் போன அதே தற்செயல். வெகுஜன வார்த்தையில் சொல்வது என்றால், விதி. ‘விதியேனு போறேன்’ என்று சொல்வார்கள் இல்லையா, அந்த விதி.
வழக்காறுகளும் இப்படி தற்செயலாய் உருவானவை தான். அவற்றிற்குப் பின்னாலும் எந்தத் திட்டமும் ஒளிந்திருக்கவில்லை. இப்படி தற்செயலாய் உருவான ஒவ்வொன்றிற்கும் ஆரம்பத்தில் அரசியல் இல்லை என்றாலும், காலப்போக்கில் இவை கருத்தியலால் ஆட்கொள்ளப்பட்டன என்பதே உண்மை.
அந்த வகையில், தமிழகத்துப் பறையாட்டத்திற்கு பாரம்பரிய அர்த்தமொன்று இருந்தது. அந்த அர்த்தம், கீழ்ப்படிதல். இந்த அர்த்தமே அதன் அரசியலாகவும் இருந்தது. 1990களில் தலித் அரசியல் மேலேழுந்து வந்த போது, இழிவாகப் பார்க்கப்பட்ட பறையாட்டத்தை அடங்க மறுக்கும் போர்ப்பிரகடனமாக மாற்றும் முயற்சி நடைபெற்றதை நாம் அறிவோம். அந்த முயற்சி தோற்றுப்போனதையும் நாம் அறிவோம். ஏன் இந்தத் தோல்வி? போர்ப்பறை இவ்வாறு கைநழுவிப் போனதற்கும் தலித் அரசியலின் வீழ்ச்சிக்குமான தொடர்புகள் என்ன என்று விவாதிக்கும் கட்டுரை, இந்த மாத காலச்சுவடில் வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பு, கீழ்ப்படிதலின் இசை.
18
வழக்காறுகள் மாறக்கூடியவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், எல்லா வழக்காறுகளிலும் மாற்றம் ஒரே போல் நடைபெறுவது இல்லை. உதாரணத்திற்கு, ஒரு வாழ்க்கை வட்டச் சடங்கும், ஒரு நிகழ்த்துக்கலையும் மாற்றத்தை ஒரே மாதிரியாக எதிர்கொள்வது இல்லை. சடங்கு, இறுக்கமானது; புனிதத்தன்மை கொண்டதால் அச்சமூட்டக்கூடியது. அதில் கைவைப்பதற்கு எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் ஒரு சடங்கில் நிகழும் மாற்றம் புறக்காரணிகளாலேயே தூண்டப்படுகிறது. புற நெருக்கடிகளால் சடங்கில் மாற்றங்கள் நிகழ முடியும். ஆனால், ஒரு நிகழ்த்துக்கலை, ஒப்பீட்டளவில் அதிக சுதந்திரம் தருவது. அது கலை என்பதாலும், படைப்பூக்கம் நிரம்பியது என்பதாலும் மாற்றங்களை திறந்த மனதுடன் அனுமதிக்கிறது. இங்கே தனிநபர்களே மாற்றங்களை உருவாக்க முடியும். சடங்கில் நிகழும் மாற்றங்களை சமூகமே தீர்மானிக்கிறது என்று சொன்னால், கலைகளில் நிகழும் மாற்றங்களை தனிநபர் உருவாக்குகிறார் என்று சொல்ல முடியும்.
19
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் எனது ‘பண்பாடு தற்செயலானது’ என்ற கருத்து குறித்தும், சடங்குகளில் நிகழும் மாற்றங்கள் சமூகமே உருவாக்குகிற மாற்றங்கள் என்பது குறித்தும் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இந்தக் கருத்தரங்கின் தலைப்பை முடிவு செய்யும் போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில், மாறும் வழக்காறுகளா? மாற்றப்படும் வழக்காறுகளா?
‘வழக்காறுகள், தானே மாற முடியாதவை’ என்பது எங்களுக்குத் தெரியும். அவற்றில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்கின்றன என்றால், அது தனிநபர்களாலோ அல்லது குழுவாலோ நடைபெறுகிறது என்றே அர்த்தம். அதனால், தனியாக ‘மாற்றப்படும் வழக்காறுகள்’ என்று சொல்ல வேண்டிய அவசியம் உருவாகவில்லை. மாறும் என்றாலே, மாற்றப்படும் என்று தான் பொருள்.
பின், மாற்றப்படும் என்று. சொல்வதில் என்ன தயக்கம்? இருக்கிறது. தயக்கம் இருக்கிறது. ‘மாற்றப்படும்’ என்ற சொல் மாற்றத்திற்கானக் காரணங்கள் வெளியிலிருக்கின்றன என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. அதாவது, யாரோ, என்ன காரணத்திற்காகவோ வழக்காறுகளை மாற்றுகிறார்கள் என்ற அபிப்பிராயத்தை அது முன்மொழிகிறது. அவ்வழக்காறு புழங்கும் சமூகத்திற்கோ அல்லது குழுவிற்கோ இம்மாற்றத்தில் துளியும் தொடர்பில்லை, சம்மதமில்லை என்ற தொனியும் அதில். வெளிப்படுகிறது. ‘வழக்காறுகள் மாறிக் கொண்டிருக்கின்றன; ஆனால், நாட்டாருக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை’ என்று நாங்கள் நம்பவில்லை. எனவே, ‘மாறும் வழக்காறுகள்’ என்று தலைப்பிட்டோம்.
ஒரு வழக்காற்றில் என்னென்ன வகைகளில், வழிகளில், முறைகளில் மாற்றங்கள் நிகழ முடியும் என்பதை இக்கருத்தரங்கில் நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். வழக்காறில் நிகழும் மாற்றங்கள் ஒரே மாதிரியானவை இல்லை என்பதால், அவற்றை வகைப்படுத்த முடியுமா என்று யோசிக்கிறோம். அப்படி யோசிக்கும் போது, சடங்கு போன்ற வழக்காறுகள் பிடிவாதமான பனுவலமைப்பை கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதே நேரம், அவை சூழலைப் பெரிதாய் கண்டுகொள்வதில்லை என்பதையும் நாம் அறிகிறோம். சடங்கு, பனுவலில் திடமாகவும், சூழலில் நெகிழ்வாகவும் இருப்பதை உணர முடிகிறது. இதற்கு நேர்மாறாக, ஒரு நாட்டார் கலை வடிவம் பனுவலில் நெகிழ்வோடும், சூழலில் திடமாகவும் வெளிப்படுகிறது. நாட்டார் கலை வடிவத்திற்கு சூழல் மிக முக்கியம். அதன் சூழலை நம்மால் வரையறுத்து விட முடியும். அதன் காரணமாகவே, இயற்கை சூழல், செயற்கை சூழல், தூண்டப்பட்ட இயற்கை சூழல் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டன. ஆனால், அக்கலைவடிவத்தின் பனுவல் கலைஞனுக்கு அதிகபட்ச சுதந்திரத்தை வழங்குகிறது. அவன் தனது படைப்பூக்கத்தை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. இதன் காரணமாகவே, சடங்கின் பனுவலில் மாற்றம் நிகழ சமூகமே நேரடியாகச் செயல்பட வேண்டியிருக்கிறது என்றும், கலைவடிவத்தில் மாற்றம் நிகழ படைப்பூக்கம் நிரம்பிய கலைஞன் போதுமாக இருக்கிறது என்றும் கூறுகிறோம்.
20
‘மாறும் வழக்காறுகள்’ கருத்தரங்கத்திற்கு அரசியல் உண்டா?
பெரும்பணம் படைத்த தனிநபர்களாலும், அதிகாரம் மிக்க ஆட்களாலும் வழக்காறுகள் மாற்றப்படுவதில்லையா என்ற கேள்வியை பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் எழுப்புகிறார். அதன் தொடர்ச்சியாக, ‘இவர்கள் நினைத்தால் தெய்வங்களின் உருவத்தையே மாற்றி அமைக்க முடியும் என்பதற்கானச் சான்றுகள் உண்டு. இது போன்றே விலங்கு உயிர்ப்பலியும் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது சில இந்துத்துவ அமைப்புகள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளும் செயல்கள் அதன் அடிப்படியைச் சிதைக்கின்றன’. இத்தகைய நிகழ்வுகளின் பின்னுள்ள நுண்ணரசியலைக் கவனிக்க வேண்டாமா என்று கேள்வி கேட்கிறார்.
‘சமூகம்’ என்ற சொல் அதன் பல்வேறு அதிகாரங்களையே எப்பொழுதும் சுட்டுகிறது. சமூகத்தின் குரல் என்பதும் இந்த அதிகார பீடங்களின் குரல் தான் என்பதை நாம் அறிவோம். சமூக அறிவியல்களில் நாம் கற்பனை செய்வது போன்ற ‘ஏராளமான தனி நபர்களின் கூட்டமைப்பு’ அல்ல சமூகம். அதில் ஜனநாயகம் செயல்படுவதில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதே போல், பண்பாடும் ஜனநாயக அமைப்பு அல்ல. சமூகம் - பண்பாடு என்ற இரண்டிலும் தொழிற்படுவது அதிகாரங்களே என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
அதே நேரம், இவ்வதிகாரங்கள் எதேச்சதிகாரங்களும் அல்ல; ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அவை வெகுமக்களின் அபிமானத்தை தக்கவைத்திருக்கின்றன. உள்ளூரின் பெரியதனக்காரர் என்பதால் அவர் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்துவிட முடிவதில்லை. அதற்கு முன் அவர் தன் முடிவுக்கு ஆதரவான மனநிலையை குழுவின் மத்தியில் உருவாக்கியாக வேண்டியிருக்கிறது. அவரிடம் பணமும் பலமும் இருப்பதால் இதை உருவாக்குவதும் அவருக்கு எளிதாக இருக்கிறது. எங்களுடைய கேள்வியெல்லாம், இது எப்படி நடக்கிறது என்பது தான். இதையே நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். (ஃப்ரூனோ லத்தூரின் Actor-Network-Theory இந்த இடத்தில் நமக்கு சில தெளிவுகளை வழங்கமுடியும் என்பது என் நம்பிக்கை.)
‘திட்டமிட்டு மாற்றப்படுகிறது’ என்ற வாக்கியத்தில், சாமானிய நாட்டுப்புறத்தவர் ஏமாளியாக வீற்றிருப்பது போலவும், ஏமாற்றப்படுவது போலவுமான கற்பனை ஒளிந்திருக்கிறது. அது அப்படி இல்லை என்பதை நாம் மிகத் தாமதமாகவே உணர்ந்திருக்கிறோம். அவர்களுக்கும் இந்த மாற்றங்களில் பங்கு இருக்கிறது என்றால், அது எவ்வாறு என்பதையே நாம் இங்கே கேள்வி கேட்கிறோம்.
21
வழக்காறுகளில் மாறுவதும் மாறாததும் குறித்து நீண்ட விவாதமொன்று நடைபெற்றிருக்கிறது. வடிவவியலாளர்களுக்கும் அமைப்பியலாளர்களுக்கும் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இவ்விவாதம் உண்மையில் வழக்காறுகளில் மாற்றம் சாத்தியமா என்பதையே தனது மையப்பொருளாகக் கொண்டிருந்தது.
நாட்டார் கதைகளின் அமைப்பை விளக்க முனைந்த ரஷ்ய நாட்டுப்புறவியலரான விளாதிமிர் ஃப்ராப், முதன் முறையாக மாறாதவை (constants), மாறுபவை (variables) என்று பேச ஆரம்பித்தார். நாட்டார் கதைகளில் இரண்டு விஷயங்கள் மாறாதவை என்பது அவரது கணிப்பு. ஒன்று, கதாபாத்திர வகைகள்; உலகில் மொத்தமே மொத்தம் ஏழு வகைக் கதாபாத்திரங்கள் தான் உண்டு என்று சொல்லி அவற்றை வகைப்படுத்திக் காட்டினார். இவை, மாறாதவை என்றார். அதே போல், இக்கதாபாத்திரங்கள் செய்யும் செயல்களும் மாறாதவை; அவற்றை பட்டியலிட்டால் 31 செயல்பாடுகள் என்றார். இந்த ஏழும், முப்பத்தொன்றும் ஃப்ராப்பை பொறுத்தவரையில் மாறாதவை.
இது ஒரு வகையில் நாட்டார் கதைகளின் இலக்கணத்தை சொல்வது போல அமைந்திருந்தது. 7 உயிரெழுத்துகளும், 31 மெய்யெழுத்துகளும் கொண்டவை தேவதைக் கதைகள்.
நாட்டார் கதைகளில் எது மாறக்கூடியது என்று கேட்ட போது, ஃப்ராப் சொன்ன பதில் ‘பண்பாட்டுத் தனித்தன்மைகள்’. எந்தப் பண்பாட்டில் ஒரு நாட்டார் கதை சொல்லப்படுகிறதோ அந்தப் பண்பாட்டிற்கு உரிய பொருட்கள் (உரிப்பொருட்கள்) அக்கதைகளில் இடம்பெறும். அந்த வகையில் அவ்வவ் திணைக்கான உரிப்பொருட்களில் மாற்றம் காணப்படும். உதாரணமாய், இந்தியக் கதைகளில் நரி என்றால், ரஷ்ய கதைகளில் கரடி, அமெரிக்கக் கதைகளில் கழுகு, ஆஸ்திரேலியக் கதைகளில் கங்காரு, ஐரோப்பியக் கதைகளில் ஓநாய், இப்படி பல.
இதையெல்லாம் சொல்லி விட்டு, இறுதியாக, ஒரு வழக்காறின் அர்த்தத்தைத் தீர்மானிப்பது அதன் மாறாக் கட்டமைப்பு மட்டுமே; மாறும், பண்பாட்டுக் காரணிகள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல என்று சொல்வது, அமைப்பியல் மானிடவியலரான கிளாட் லெவி ஸ்ட்ராசை கடுமையாக எதிர்வினையாற்ற வைத்தது. திணைக்குத் திணை மாறும் உரிப்பொருட்களுக்கான முக்கியத்துவம் குறித்து அவர் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார். ஆனால், ஃப்ராப்பும் லெவி ஸ்ட்ராசும் பண்பாட்டுக் காரணிகளின் பங்கு குறித்து வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும், ஒரு வழக்காறின் உள்ளார்ந்த கட்டமைப்பு மாறாதது என்பதிலும், அதன் வெளிப்புறப் பண்பாட்டுக் கூறுகளே மாறுகின்றன என்பதிலும் ஒருமித்த பார்வையைக் கொண்டிருந்தார்கள்.
வழக்காறுகளின் உள்ளார்ந்த கட்டமைப்பு சிதைக்கப்படும் பொழுது… என்பதே நாம் இன்றைக்கு சந்திக்கிற சிக்கல். நாட்டுப்புறக் கலைகளின் இலக்கணம் மீறப்படும் பொழுது என்ன நடக்கிறது என்பதையே நாம் விவாதிக்க வேண்டும்.
Comments