மானிடவியல், நாட்டுப்புறவியல், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளைத் தமிழில் படிப்பதற்கு ஐந்தாறு பேர்களே இருக்கிறார்கள் என்ற நினைப்பில் நிறைய நேரம் நான் எழுதுவதை என் கணிணியை விட்டு வெளியே எடுப்பதே இல்லை.
மேலும் நான்கு பக்கத்திற்குள் கட்டுரை எழுதுகிற ஆளும் நான் இல்லை என்பதால், யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
இப்படித்தான் 2008ல் பாண்டியனின் நூலுக்கு விமர்சனம் கேட்ட காலச்சுவடு, நான் எழுதித் தந்த பக்க அளவைப் பார்த்து விட்டு, இதை விமர்சனமாகவெல்லாம் போட முடியாது என்று கலவரமாகி, விமர்சனக் கட்டுரையாக வேண்டுமானால் வைத்துக் கொள்கிறோம் என்று சமாதானமானார்கள்.
அப்படியே என் இருபது, முப்பது பக்கக் கட்டுரைகளை வெளியிட 'புது விசை' மாதிரியான இதழ்கள் முன்வந்தாலும், வாசகர்கள் அதற்கு நாலு பக்கமும் பின் அடித்து அப்படியே மொத்தமாய் கடந்து அடுத்த பக்கத்திற்குப் போய்விடுவார்கள்.
என்னைப் போலவே கட்டுரை எழுதுகிற அபாக்கியசாலிகள் மட்டும் தங்களது அடுத்தடுத்த கட்டுரைகளில் எனக்கு மறைமுகக் கண்டனங்களை வைத்திருப்பார்கள். நேரடியாய் சொல்லி விட்டால் நான் பிரபலமாகிடுவேனாம்!!!!
இந்த நொம்பலத்திலும், தமிழ்ச் சமூகத்தை எப்பாடு பட்டாவது திருத்தியே தீருவது என்று அப்பப்ப ஒரு 'எழுச்சி' (தப்பா போகுதோ?) உண்டாகும்.
அப்படியொரு கிருஷ்ணபட்சத்தில் தான் இந்த வலைப்பூ ஜனித்தது.
வழக்கம் போல் ஆளண்டாமல் கிடந்த இதனை தங்களது பராக்கிரமங்கள் மூலம் ரங்க நாதன் தெரு போல் மாற்றியமைத்த ஒத்திசைவு என்ற வலைப்பூவில் எழுதும் வெ. ராமசாமிக்கும், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரிக்கும் நன்றி! (தமிழில் 'நன்றிகள்' இல்லை என்பதால் இரண்டு பேரும் ஒரே நன்றியை சண்டை போடாமல் பப்பாதியாய் பிரித்துக் கொள்ளுங்கள்.)
தமிழ் காத்த குமாரசாமி போல், நான் தப்பிதமாய் உச்சரித்து எழுதிய Robert Deliege என்ற பெயருக்கான ஃப்ரெஞ்ச் உச்சரிப்பை நாகரீகமாய் சுட்டிக் காட்டிய வெ. ராமசாமிக்குக் கடன் பட்டவனானேன். உடனே திருத்தியும் விட்டேன்.
Commentaires